மோட்டார்சைக்கிள் மீது மினிவேன் மோதி தந்தை- மகள் பரிதாப சாவு 3 பேர் காயம்

திருச்செங்கோடு அருகே மோட்டார்சைக்கிள் மீது மினிவேன் மோதி தந்தை-மகள் பரிதாபமாக இறந்தனர். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2018-12-09 22:30 GMT
எலச்சிப்பாளையம்,

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள வேப்பனம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 38). கோவில் பூசாரி. இவரது மகள் இலக்கியா (12). இவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் நேற்று பள்ளிபாளையத்தில் இருந்து மோட்டார்சைக்கிளில் வேப்பனம்பாளையத்திற்கு சென்று கொண்டிருந்தனர். வரகூராம்பட்டி என்ற இடத்தில் வந்த போது கூட்டப்பள்ளியை சேர்ந்த தாஸ் (43) என்பவர் ஓட்டி சென்ற மினிவேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, குணசேகரன் வந்த மோட்டார்சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

மேலும் அந்த மினிவேன் அப்பகுதியில் பஸ்சுக்காக காத்திருந்த கதிர்வேல், அமுதா, நாச்சியப்பன் ஆகிய 3 பேர் மீதும் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த குணசேகரனும், அவரது மகள் இலக்கியாவும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காயம் அடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு ரூரல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் விபத்தில் இறந்த குணசேகரன், இலக்கியாவின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் தந்தை-மகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்