காரிமங்கலத்தில் கோணிப்பை வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை

காரிமங்கலத்தில் கோணிப்பை வியாபாரி வீட்டில் 20 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-12-10 23:00 GMT
காரிமங்கலம், 

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 39). கோணிப்பை வியாபாரி. இவர் தனது குடும்பத்தினருடன் கடந்த 8-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே குரும்பட்டி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர்கள் வீட்டுக்கு வந்தனர்.

அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு பெரியசாமி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அங்கு 2 பீரோக்கள் திறக்கப்பட்டு அதில் இருந்த 20 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டு கதவின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இது குறித்து காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் பெரியசாமி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தர்மபுரி தடயவியல் நிபுணர்களும் விரைந்து சென்று அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்