காவிரி, அமராவதி ஆறுகளில் மணல் அள்ள அனுமதி கோரி மாட்டு வண்டி தொழிலாளர்கள் மனு

கரூரில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் காவேரி, அமராவதி ஆறுகளில் மணல் அள்ள அனுமதி வழங்ககோரி மாட்டு வண்டி தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Update: 2018-12-10 22:45 GMT
கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து 337 மனுக்கள் பெற்றார். அப்போது கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில், மார்னிங் ஸ்டார் பள்ளியின் சார்பாக ரூ.10,500-ம், நடையனூர் நம்மாழ்வார் தென்னை உற்பத்தியாளர்கள் நிர்வாகம் சார்பாக ரூ.25,000, ஓய்வுபெற்ற தபால் அதிகார் ஒருவர் ரூ.5,000-ம், வழங்கினார்கள்.

இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வசுரபி, மக்கள் குறை தீர்க்கும் தனித்துணை கலெக்டர் மீனாட்சி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அதிகாரி குமரேசன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அதிகாரி லீலாவதி உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், மண்மங்கலம் தாலுகா குந்தாணிபாளையம், நத்தமேடு பகுதிகளை சேர்ந்த சர்க்கஸ் கலைஞர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், எங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தனர். ஆதித்தமிழர் முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்கள், கடவூர் ஒன்றிய செயலாளர் பாரதி தலைமையில் கொடுத்த மனுவில், கடவூரிலுள்ள மைலம்பட்டி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி நவீன சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருந்தனர்.

கரூர் மாவட்டத்தில் காவிரி, அமராவதி ஆறுகளில் மணல் அள்ளி பிழைப்பு நடத்தும் மாட்டு வண்டி தொழிலாளர்கள், உரிமையாளர்கள் கொடுத்த மனுவில், அமராவதி-காவிரி ஆறுகளில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி கட்டுமான பணிகளுக்கு தான் வழங்கி வருகிறோம். அரசு கட்டி கொடுக்கும் பசுமைவீடு, அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் உள்ளிட்டவற்றுக்கும் மணல் கொடுக்கிறோம். இந்த நிலையில் திடீரெ மணல் அள்ள தடை விதித்துள்ளதால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மணல் அள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அன்பழகன் பதில் கூறினார்.

மேலும் செய்திகள்