கொலை வழக்கில் கைதான பிரபல ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருச்சியில் கொலை வழக்கில் கைதான பிரபல ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2018-12-11 23:00 GMT
திருச்சி,

திருச்சி முதலியார் சத்திரம் மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் சந்துரு. இவருக்கும், மேத்யூஸ் என்ற வேதா என்பவருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக பகை இருந்து வந்தது. கடந்த அக்டோபர் மாதம் 9-ந் தேதி இரவு சந்துரு தனது நண்பர்களுடன் ஒரு ஆட்டோவில் விண்ணரசி தெரு அருகே வந்தார்.

அந்த வேளையில், வேதா தனது நண்பர் பாண்டி என்ற வீரமுத்து மற்றும் சிலருடன் சேர்ந்து ஆட்டோவில் வந்த சந்துருவை வழிமறித்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். இதுகுறித்து பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து வேதாவையும், பாலக்கரை ஆட்டுக்கார தெருவை சேர்ந்த கவுரீஸ் என்ற நவநீதிகிருஷ்ணன்(வயது 22) உள்பட சிலரை கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். கைதானவர்களில் நவநீதகிருஷ்ணன் பிரபல ரவுடி ஆவார்.

கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட நவநீதகிருஷ்ணன் மீது ஏற்கனவே, திருச்சி பொன்மலை போலீஸ் நிலையத்தில், வழிப்பறி வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. மேலும், இவர் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர்் என விசாரணையில் தெரிய வந்ததாலும், அவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டும் பாலக்கரை போலீசார் அவரை ஜாமீனில் வெளிவரமுடியாத வகையில் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் சிபாரிசு செய்தனர்.

அதன்பேரில் அவர், பிரபல ரவுடியான நவநீதகிருஷ்ணனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க நேற்று உத்தரவிட்டார்.

அதன்பேரில் புதுக்கோட்டை சிறையில் இருந்து வரும் நவநீதகிருஷ்ணனிடம் குண்டர் சட்டத்தின்படி கைது செய்யப்பட்ட ஆணையினை பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார் வழங்கினார்.

மேலும் செய்திகள்