பயிர்க்காப்பீட்டு தொகை வழங்க கோரி கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டம்

பயிர்க்காப்பீட்டு தொகை வழங்க கோரி அம்மாப்பேட்டையில் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு இந்திய கம்யூனிஸ்டு கட்சி யினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-12-12 22:45 GMT
அம்மாப்பேட்டை,

அனைத்து விவசாயிகளுக்கும் உடனடியாக பயிர்க்காப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் அம்மாப்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி அம்மாப்பேட்டை ஒன்றிய செயலாளர் ஆர்.செந்தில்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய துணைச்செயலாளர் எஸ்.எம்.குருமூர்த்தி, பொருளாளர் தாமரைச்செல்வி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் எஸ்.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தை மாவட்ட செயலாளர் மு.அ.பாரதி தொடங்கி வைத்தார். முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் விடுபட்ட அனைவருக்கும் பயிர்க்காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதைத்தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வங்கி செயலாளர் மணி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது விடுபட்ட அனைவருக்கும் வருகிற 31-ந் தேதிக்குள் (திங்கட்கிழமை) பயிர்க்காப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்