கிராம நிர்வாக அலுவலர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்தம் நிவாரண பொருட்கள் வழங்கும் பணி பாதிப்பு

நாகை, கீழ்வேளூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் 4-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக நிவாரண பொருட்கள் வழங்கும் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2018-12-13 22:45 GMT
நாகப்பட்டினம்,

பழைய ஓய்வூதிய திட்டத்தினை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். கூடுதல் பொறுப்பு கிராமங்களுக்கு பொறுப்பூதியம் வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலகத்தில் இணையதள வசதிகள் அமைத்தல், குடிநீர், கழிவறை மற்றும் மின்வசதி அமைத்து தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று 4-வது நாளாக நாகை தாசில்தார் அலுவலகம் முன்பு வட்ட தலைவர் மாரியப்பன் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வட்ட செயலாளர் செல்வம், பொருளாளர் செல்லதுரை, பாக்கியராணி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் காரணமாக புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதேபோல, மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கீழ்வேளூர் தாசில்தார் அலுவலக வளாகத்தில் நேற்று கிராம நிர்வாக அலுவலர்கள் 4-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க வட்ட செயலாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். வட்ட தலைவர் குமாரவடிவேல், பொருளாளர் செல்வேந்திரன், மாவட்ட அமைப்பு செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடிவில் செய்தி தொடர்பாளர் தினேஷ் நன்றி கூறினார். இதில் அனைத்து கிராம நிர்வாக அலுவலர் களும் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்