ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் அலுவலகத்தில் ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய 2 பேர் கைது

ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் அலுவலகத்தில் ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2018-12-13 23:30 GMT

ஆர்.எஸ்.மங்கலம்,

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா திருப்பாலைக்குடியைச் சேர்ந்த சண்முகம் என்பவர் காந்தி நகரில் 1 ஆயிரத்து 404 சதுர அடியில் வீடு கட்டி வருகிறார். இதற்கு கட்டிட அனுமதிக்காக ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு சண்முகம் இவ்வளவு பணம் இல்லை எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் சண்முகம், அவருடைய உறவினர் ராமமூர்த்தி ஆகியோர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையிடம் இந்த விவரத்தை கூறி உள்ளனர். அவர்களின் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து அனுப்பியுள்ளனர்.

அப்போது சண்முகமும் ராமமூர்த்தியும் வட்டார வளர்ச்சி அலுவலர் பச்சம்மாளிடம் பணம் கொடுக்கும்போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு உன்னிகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் ஜானகி, வானதி ஆகியோர் வட்டார வளர்ச்சி அலுவலர் பச்சம்மாளையும், திருப்பாலைக்குடி ஊராட்சி செயலாளர் மாணிக்கத்தையும் கையும் களவுமாக பிடித்து வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து ராமநாதபுரம் கொண்டு சென்றுள்ளனர்.

மேலும் செய்திகள்