கர்நாடகத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை : மேல்-சபையில் குமாரசாமி தகவல்

கர்நாடகத்தில் சட்ட விரோதமாக மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேல்-சபையில் முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.

Update: 2018-12-14 00:35 GMT
பெலகாவி, 

கர்நாடக மேல்-சபையில் நேற்று கேள்வி நேரத்தில் பா.ஜனதா உறுப்பினர் தேஜஸ்வினிகவுடா கேட்ட கேள்விக்கு முதல்-மந்திரி குமாரசாமி பதிலளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் மதுபானம் விற்பனை செய்ய 10 ஆயிரத்து 566 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சட்டவிரோதமாக மதுபானம் விற்க அனுமதிக்கவில்லை. சட்டவிரோதமாக மதுபானம் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே மதுபானம் விற்பனை செய்ய வேண்டும்.

தனியார் நிறுவனத்திடம் இருந்து தரமான மதுபானங்கள் பெற்று விற்பனை செய்யப்படுகிறது. உடல், சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் மதுபானங்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், அத்தகைய கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

முன்பு நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, கள்ளசாராயத்தை ஒழித்தேன். மதுபானம் குடிப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. சட்டப்படி பள்ளி-கல்லூரிகள் மற்றும் கோவில்கள் அருகே மதுபானம் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

மேலும் செய்திகள்