எடப்பாடி அருகே பஸ்-வேன் மோதல்; டிரைவர் பரிதாப சாவு கிளனர் உள்பட 5 பேர் காயம்

எடப்பாடி அருகே பஸ்-வேன் மோதிக்கொண்ட விபத்தில் வேன் டிரைவர் பரிதாபமாக இறந்தார். கிளனர் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2018-12-14 22:15 GMT
எடப்பாடி,
இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து கறிக்கோழிகளை ஏற்றிக்கொண்டு ஒரு வேன் சங்ககிரி நோக்கி சென்றது. வேனை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சந்தானபாரதி (வயது 25) என்பவர் ஓட்டி வந்தார்.

எடப்பாடி அருகே கோணமோரிமேட்டில் வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது சங்ககிரியில் இருந்து எடப்பாடி நோக்கி ஒரு சுற்றுலா பஸ் வந்து கொண்டிருந்தது.

எதிர்பாராதவிதமாக வேனும், பஸ்சும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. இதில் வேன் டிரைவர் சந்தானபாரதி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

வேன் கிளனர் தமிழரசன், வேனில் வந்த தொழிலாளி அருள்குமார், பஸ் டிரைவர் சண்முகம் மற்றும் பஸ்சில் இருந்த 2 பெண்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து கொங்கணாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்