சுங்குவார்சத்திரம் அருகே லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; தந்தை, மகன் பலி

சுங்குவார்சத்திரம் அருகே லாரி-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தந்தை, மகன் பலியானார்கள்.

Update: 2018-12-14 22:30 GMT
ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தை அடுத்த கோவலவேடு, மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 35). இவரது மகன்கள் லோகேஷ் (13), காமேஷ்வரன் (12). இவர்கள் இருவரும் குன்னம் அரசு பள்ளியில் படித்து வந்தனர். அவர்களை சேகர் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்து சென்றார்.

குன்னம் அருகே அதே பள்ளியில் படிக்கும் உறவுக்கார சிறுமி தனலட்சுமி சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். தனலட்சுமியை தன்னுடைய மோட்டார் சைக்கிளில் ஏற்றுவதற்காக சேகர் சாலை ஓரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அப்போது வேகமாக வந்த மணல் லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் சேகர், லோகேஷ், காமேஷ்வரன், தனலட்சுமி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவர்களை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்களை மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சேகரும், லோகேசும் பிரிதாபமாக இறந்தனர்.

பின்னர் காமேஷ்வரனும், தனலட்சுமியும் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து சுங்குவார்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோகசக்கரவர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்