சுதந்திர தினம், குடியரசு தின விழாக்களில் எம்.எல்.ஏ.க்கள் தேசிய கொடி ஏற்ற அனுமதிப்பது குறித்து மத்திய அரசுடன் விவாதிக்கப்படும் - குமாரசாமி தகவல்

சுதந்திர தினம், குடியரசு தின விழாக்களில் தாலுகா தலைநகரங்களில் எம்.எல்.ஏ.க்கள் தேசிய கொடி ஏற்ற அனுமதிப்பது குறித்து மத்திய அரசுடன் விவாதிக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.

Update: 2018-12-14 23:15 GMT

பெங்களூரு,

சுதந்திர தினம், குடியரசு தின விழாக்களில் தாலுகா தலைநகரங்களில் எம்.எல்.ஏ.க்கள் தேசிய கொடி ஏற்ற அனுமதிப்பது குறித்து மத்திய அரசுடன் விவாதிக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.

கர்நாடக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த உறுப்பினர் நாடகவுடா கேட்ட கேள்விக்கு முதல்-மந்திரி குமாரசாமி பதிலளிக்கையில் கூறியதாவது:-

சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாக்களில் மாநில தலைநகரத்தில் முதல்-மந்திரி மற்றும் மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட பொறுப்பு மந்திரிகள் தேசிய கொடி ஏற்றுகிறார்கள்.

தாலுகா தலைநகரங்களில் எம்.எல்.ஏ.க்கள் தேசிய கொடி ஏற்ற அனுமதிப்பது குறித்து மத்திய அரசுடன் விவாதிக்கப்படும். இந்த விஷயத்தில் மாநில அரசு முடிவு எடுக்க முடியாது. இதுதொடர்பாக உள்துறை மந்திரியுடன் பேசுகிறேன்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

முன்னதாக பேசிய உறுப்பினர் நாடகவுடா, “சுதந்திர தினம், குடியரசு தின விழாக்களில் தேசிய கொடி ஏற்றுவது மிகப்பெரிய கவுரவம் ஆகும். டெல்லி செங்கோட்டையில் பிரதமரும், மாநில தலைநகரங்களில் முதல்-மந்திரிகளும், மாவட்ட தலைநகரங்களில் மந்திரிகளும் தேசிய கொடி ஏற்றுகிறார்கள்.

அதே போல் எம்.எல்.ஏ.க்களும் மக்கள் பிரதிநிதிகள் தானே. அதனால் தாலுகா தலைநகரங்களில் எம்.எல்.ஏ.க்கள் தேசிய கொடி ஏற்று அனுமதிக்க வேண்டும்” என்றார்.

மேலும் செய்திகள்