காணாமல்போன மகளை மீட்டுதரக்கோரி போலீஸ் நிலையம் முன்பு தந்தை தீக்குளிக்க முயற்சி

காணாமல்போன மகளை மீட்டுதரக்கோரி போலீஸ் நிலையம் முன்பு அவரது தந்தை தீக்குளிக்க முயன்றார்.

Update: 2018-12-16 22:15 GMT
தரகம்பட்டி,

கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே உள்ள பால விடுதி கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மகள் சரண்யா (வயது 19). இவர் கரூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த 14-ந்தேதி கல்லூரிக்கு சென்ற சரண்யா மாலை வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லையாம்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வெள்ளைச்சாமி சரண்யாவின் உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் அவரை தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து பாலவிடுதி போலீஸ் நிலையத்தில் வெள்ளைச்சாமி தனது மகளை யாரோ கடத்தி சென்றுவிட்டார்கள், அவர்களிடம் இருந்து மகளை மீட்டுத்தரக்கோரி நேற்றுமுன்தினம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த வெள்ளைச்சாமி தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் வெள்ளைச்சாமியிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பறித்து சென்றனர். இதையடுத்து பாலவிடுதி போலீசார் சரண்யா காணாமல் போனது குறித்து வழக்குப் பதிவு செய்தனர். இதை யடுத்து வெள்ளைச்சாமியிடம் உங்களது மகள் காணாமல்போனது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், இனி இதுபோன்ற செயலில் ஈடுபடவேண்டாம் என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். போலீஸ் நிலையம் முன்பு ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்