கடற்படையில் 400 பேர் சேர்ப்பு - 10-ம் வகுப்பு படிப்பு தகுதி

கடற்படையில் 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு பயிற்சியுடன் கூடிய மாலுமி பணி அறிவிக்கப்பட்டு உள்ளது.மொத்தம் 400 பேர் சேர்க்கப்படுகிறார்கள். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

Update: 2018-12-17 09:06 GMT
இந்திய கடற்படையில் பல்வேறு பயிற்சிகளின் அடிப்படையில் தகுதியான இளைஞர்கள் பணியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.

தற்போது செய்லர் (எஸ்.எஸ்.ஆர். மற்றும் ஏ.ஏ. ஆகஸ்டு 2019) என்ற பயிற்சி சேர்க்கையின் அடிப்படையில் மாலுமி பணியில் ஏராளமானவர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். கடந்த வாரம் பிளஸ்-2 படித்த 3 ஆயிரம் பேரை சேர்ப்பதற்கான அறிவிப்பை பார்த்தோம். தற்போது 10-ம் வகுப்பு படித்தவர்கள் ‘செய்லர் பார் மெட்ரிக் ரெக்ரூட் (எம்.ஆர். அக்டோபர் 2019)’ என்ற பயிற்சி சேர்க்கையின் அடிப்படையில் சேர்க்க விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 400 பேர் சேர்க்கப்படுகிறார்கள். இவர்கள் பயிற்சிக்குப் பின் பணி நியமனம் பெறலாம். இந்திய குடியுரிமை பெற்ற, திருமணமாகாத ஆண்கள் இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்.

இந்த பயிற்சிகளில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய இதர தகுதிகளை இனி பார்ப்போம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 1-10-1998 மற்றும் 30-9-2002 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். இந்த இரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்களே.

கல்வித் தகுதி:

மெட்ரிகுலேசன் (10-ம் வகுப்பு) அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:

எழுத்துத் தேர்வு, உடல்உறுதித் திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகிய வற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். குறிப்பிட்ட கால பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்கள் பணி நியமனம் பெறலாம். இவர்கள் மாஸ்டர் சீப் பெட்டி ஆபீசர்-1 பணி வரை பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு பெற முடியும். இதற்கான தேர்வு முறைகள் வருகிற பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது.

உடல் தகுதி:

விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையும் இருக்க வேண்டும். மார்பளவு 5 செ.மீ. விரியும் திறனுடன் இருக்க வேண்டும். பார்வைத்திறன் கண்ணாடியின்றி 6/6, 6/9 மற்றும் கண்ணாடியுடன் 6/6, 6/6 என்ற அளவுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். ரூ.205 கட்டணம் செலுத்த வேண்டும். குறிப்பிட்டவர்களுக்கு இந்த கட்டணத்தில் விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் தேவையான இடத்தில், புகைப்படம் மற்றும் கையொப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை சொந்த உபயோகத்திற்காக கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இணையதள விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள் : 14-12-2018-ந் தேதி

விண்ணப்பிக்க கடைசிநாள் : 30-12-2018

விண்ணப்பிக்கவும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் பார்க்க வேண்டிய இணையதள முகவரி: https://www.joinindian navy.gov.in என்ற முகவரியைப் பார்க்கவும்.

மேலும் செய்திகள்