உளுந்தூர்பேட்டையில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்; விவசாயி பலி

உளுந்தூர்பேட்டையில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2018-12-17 22:00 GMT
உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜி மகன் ஏழுமலை(வயது 34), விவசாயி. இவருடைய மனைவி மகேஷ், இவர்களுக்கு 2 மகள் மற்றும் 1 மகன் உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை ஏழுமலை தனது மோட்டார் சைக்கிளில் சொந்தவேலை காரணமாக உளுந்தூர்பேட்டைக்கு சென்றார். பின்னர் அங்கு வேலையை முடித்துவிட்டு அதேமோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.

உளுந்தூர்பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது திருச்சியில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பஸ் ஒன்று ஏழுமலை ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் பலியான ஏழுமலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்