நடுரோட்டில் போலீஸ்காரரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது

நடுரோட்டில் போலீஸ்காரரை தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-12-17 22:47 GMT
மும்பை,

மும்பை டி.பி. மார்க் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுாிபவர் தீபக் தாவ்ரே(வயது28). இவர் சம்பவத்தன்று இரவு கிராண்ட் ரோடு கிழக்கு பகுதியில் தனியார் பள்ளி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, அந்த பகுதியில் 2 வாலிபர்கள் போக்குவரத்துக்கு இடையூராக நடுரோட்டில் நின்று கொண்டு வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். அவர்களை அங்கிருந்து செல்லும்படி தீபக் தாவ்ரே கூறினார்.

இதனால் கோபம் அடைந்த வாலிபர்கள் போலீஸ்காரரை தவறாக பேசியும், அவரின் சீருடை காலரை பிடித்து இழுத்து முகத்தில் குத்தினார்கள். இதில், அவர் படுகாயம் அடைந்தார். இதுபற்றி அவர் `வாக்கிடாக்கி' மூலம் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் டி.பி. மார்க் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதையடுத்து போலீஸ்காரரை தாக்கிய 2 வாலிபர்களையும் அதிரடியாக கைது செய்தனர். மேலும் போலீஸ்காரர் தீபக் தாவ்ரேயை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். இதையடுத்து போலீசார் இருவர் மீதும் அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

விசாரணையில், அவர்கள் சாக்கிநாக்கா பகுதியை சோ்ந்த முகமது ஷேக்(34) மற்றும் நாக்பாடா பகுதியை சேர்ந்த முகமது ரசாக் ஷேக் (32) என்பது தெரியவந்தது.

மேலும் செய்திகள்