நாய் குறுக்கே சென்றதால் விபத்து: மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி ஆசிரியை பலி - கணவர் படுகாயம்

நாய் குறுக்கே சென்றதால் மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி ஆசிரியை பரிதாபமாக இறந்தார். அவரது கணவர் படுகாயம் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2018-12-18 22:45 GMT
சூலூர், 

கோவை அருகே உள்ள ஒண்டிப்புதூர் சாஸ்திரி நகரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி தனபாக்கியம் (வயது 30). இவர் ஒண்டிப்புதூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்தார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

சண்முகசுந்தரம், தனபாக்கியம் ஆகியோர் நேற்று காலை சூலூர் அருகே உள்ள பெருமாள் கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். கணவன், மனைவி இருவரும் சூலூர்- திருச்சி சாலையில் உள்ள குமரன் கோட்டம் அருகே வந்து கொண்டு இருந்தனர்.அப்போது திடீரென்று சாலையின் குறுக்கே ஒரு நாய் வந்தது. அதன் மீது மோதாமல் இருக்க சண்முகசுந்தரம் பிரேக் பிடித்தார். அப்போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் கணவன், மனைவி தூக்கி வீசப்பட்டனர்.

இந்த விபத்தில் தனபாக்கியத்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சண்முகசுந்தரம் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சூலூர் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் சூலூர் போலீசார் விரைந்து சென்று தனபாக்கியத்தின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், சண்முகசுந்தரம் ஹெல்மெட் அணிந்திருந்ததாகவும், இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த தனபாக்கியம் ஹெல்மெட் அணியாததால் தலையில் பலத்த காயமடைந்து இறந்து விட்டதாகவும் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்