பள்ளிப்பட்டு அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

பள்ளிப்பட்டு அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-12-23 21:30 GMT
பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே கரிம்பேடு கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பள்ளம் தோண்டியபோது குடிநீர் குழாய் சேதம் அடைந்தது. இதனால் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

இது குறித்து கிராம ஊராட்சி செயலாளர் வெங்கடரமணா எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் பள்ளிப்பட்டு நகர நெடுஞ்சாலையில் காலிகுடங்களுடன் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும் பள்ளிப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து பள்ளிப்பட்டு வட்டார வளர்ச்சி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்தனர்.

இதை தொடர்ந்து கிராம மக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக அந்த பகுதியில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்