வாலிபரை சிக்க வைப்பதற்காக மோட்டார் சைக்கிளில் கஞ்சாவை வைத்தவர் கைது

வழக்கில் வாலிபரை சிக்க வைப்பதற்காக அவரது மோட்டார் சைக்கிளில் கஞ்சாவை வைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த போலீஸ் ஏட்டு மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2018-12-24 22:15 GMT
தாம்பரம்,

சென்னையை அடுத்த அனகாபுத்தூரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 35)் மெக்கானிக். கடந்த 22-ந் தேதி, அதேபகுதியை சேர்ந்த சதீஷ், பூமிநாதன் ஆகிய இருவர் மீது, தகராறு செய்ததாக சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக சங்கர் நகர் போலீசார் விசாரணை நடத்தி இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.

இதற்கிடையில், காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை எடுக்க, நேற்று முன்தினம் இருவரும் வந்தனர். அப்போது, அவர்களது வாகனத்தில் இருந்து, தலைமை காவலரான ராமதுரை(38) என்பவர், கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, இருவரையும் பிடித்து விசாரணை நடத்தப்பட்டது. அதில், கஞ்சா பொட்டலங்களை பதுக்கவில்லை என்று சதீஷ், பூமிநாதன் கூறினர். சந்தேகமடைந்த போலீசார், காவல் நிலைய கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்தனர்.

அதில் வாகனத்தில், கஞ்சா பொட்டலங்களை வைத்தது, ஆறுமுகம் என்பதும் சதீஷை பழிவாங்குவதற்காக, தலைமை காவலரான ராமதுரையின் துணையுடன், கஞ்சா பொட்டலங்களை வைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து, ஆறுமுகத்தை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

இது சம்பந்தமாக, தலைமை காவலர் ராமதுரை மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

அவரை பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்