கோவில்பட்டி, ஆறுமுகநேரியில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

கோவில்பட்டி, ஆறுமுகநேரியில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

Update: 2018-12-25 21:45 GMT

கோவில்பட்டி, 

கோவில்பட்டி, ஆறுமுகநேரியில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

கோவில்பட்டி

கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆர்.சி. கிறிஸ்தவ ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு ஆலய பங்குதந்தை அலாசியஸ் துரைராஜ், உதவி பங்கு தந்தை மிக்கேல், பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயரின் செயலாளர் ஸ்டாலின் அடிகளார், கொல்கத்தா மறைமாவட்ட அருட்தந்தை மைக்கேல் ஆகியோர் இணைந்து கிறிஸ்து பிறப்பு பெருவிழா திருப்பலியை நடத்தினர்.

பின்னர் தேவதைகள் வேடம் அணிந்த சிறுமிகள் ஏசு பிறப்பை நாடகமாக நடித்து காட்டினர். இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

கோவில்பட்டி சி.எஸ்.ஐ. பரிபவுலின் ஆலயத்தில் நேற்று அதிகாலை 4 மணிக்கு கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி தொடங்கியது. இதில் கிறிஸ்துமஸ் செய்தியை சேகர குரு ஏசுவடியான் துரைசாமி, கவுரவ குரு இம்மானுவேல், கிறிஸ்துமஸ் நற்செய்தி வழங்கினார்கள். இதில் திருமண்டல பெருமன்ற உறுப்பினர் ஆன்ட்ரூஸ் சாம்ராஜ், சேகர செயலாளர் ஜேக்கப் ராஜாமணி, சேகர பொருளாளர் ராஜதுரை, திருமண்டல உறுப்பினர்கள் டேவிட், ரவி, சரோஜினி மற்றும் மார்க்கு உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

ஆறுமுகநேரி

ஆறுமுகநேரி புனித சவேரியர் ஆலயத்தில் நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு கிறிஸ்துமஸ் பெருவிழா திருப்பலி நடந்தது. பங்குதந்தை ஸ்டார்வின் அடிகளார் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தார். ராஜமன்யபுரம் அந்தோணியார் ஆலயத்தில் முன்னாள் பங்குதந்தை ரூபர்ட் அருள்வளன் அடிகளார் திருப்பலி நடத்தினார். காயல்பட்டினம் கொம்புத்துறை புனித முடியப்பர் ஆலயத்தில் பங்குதந்தை வில்சன் அடிகளாரும், சிங்கத்துறை ஆலய பங்குதந்தை சில்வெஸ்டர் அடிகளாரும் இணைந்து திருப்பலி நடத்தினர்.

புன்னக்காயல் தூய ராஜகன்னி மாதா ஆலயத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழா ஆலய பங்குதந்தை கிஷோக் அடிகளார், உதவி பங்குதந்தை ஜேசுராஜா அடிகளார் ஆகியோர் இணைந்து சிறப்பு திருப்பலி நடத்தினர். சேர்ந்தபூமங்கலம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் பங்குதந்தை சில்வெஸ்டர் அடிகளாரும், பழையகாயல் தூய பரிபூரண மாதா ஆலயத்தில் பங்குதந்தை சகாயராஜ் அடிகளாரும் சிறப்பு திருப்பலி நடத்தினார்கள்.

மேலும் ஆறுமுகநேரி சேகரம் மடத்துவிளை தூய யோவான் ஆலயத்தில் சேகர குரு ஆஷா தேவதாஸ் கிறிஸ்துமஸ் ஆராதனை நடத்தினார். பூவரசூர் பரிதிருத்துவ ஆலயத்தில் அதிகாலை 4 மணிக்கு கிறிஸ்துமஸ் ஆராதனை நடந்தது. அதேபோல் ஆத்தூர், தெற்கு ஆத்தூர், உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்