மத்தூர் அருகே வாலிபர் குத்திக்கொலை - அக்காள் கணவர் கைது

மத்தூர் அருகே வாலிபரை குத்திக்கொலை செய்த அக்காள் கணவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-12-25 22:15 GMT
மத்தூர்,

மத்தூர் அருகே வாலிபரை குத்திக்கொலை செய்த அக்காள் கணவரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள மாடரஅள்ளி அண்ணா நகரைச் சேர்ந்தவர் மணிமாறன். இவரது மகன் வல்லரசு (வயது 18). கூலித்தொழிலாளி. இவரது அக்காள் கணவர் வெங்கடேசன் (29). கார் டிரைவர். அதே பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். கடந்த 21-ந் தேதி அதே பகுதியைச் சேர்ந்த சிலருடன் வெங்கடேசன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த வல்லரசு தனக்கு வேண்டாதவர்களுடன் நீங்கள் ஏன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வெங்கடேசன் சூரி கத்தியால் வல்லரசை சரமாரியாக குத்தினார்.

இதில் பலத்த காயம் அடைந்த வல்லரசை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு அவர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக மத்தூர் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வல்லரசு நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்