திருவண்ணாமலையில் வாலிபர் எரித்துக் கொலை போலீசார் விசாரணை

திருவண்ணாமலையில் வாலிபர் எரித்துக் கொலை செய்யப்பட்டார். அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-12-30 21:45 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை வேங்கிக்கால் ஏரியில் நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஆடு மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள சீமை கருவேல மரத்தின் அருகில் துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அந்த இடத்தில் பாதி எரிந்து அழுகிய நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்து கிடந்தவர் யார் என்று தெரியவில்லை. அவரது வயது சுமார் 30 இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் அவர் இறந்து கிடந்த இடத்தில் செருப்பு மற்றும் கண்ணாடி ஒன்று கிடந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர்.

மேலும் இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து எரிக்கப்ட்டு கிடந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், அவரை எரித்துக் கொலை செய்தது யார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்