சாராயம் கடத்தி சென்றவர்களை பிடிக்க முயன்றபோது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபர் கைது

கீழ்வேளூர் அருகே சாராயம் கடத்தி சென்றவர்களை பிடிக்க முயன்றபோது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும், தப்பி ஓடியவரை வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2018-12-31 22:15 GMT
கீழ்வேளூர்,

நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாராயம் கடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சூப்பிரண்டு உத்தரவின் பேரில் உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் மேற்பார்வையில் கீழ்வேளூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் மற்றும் போலீசார் கீழ்வேளூரை அடுத்த ராதாமங்கலம் பகுதியில் வாகன சோதனை பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது நாகவிளாகம் என்ற இடத்தில் 2 பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தனர். அதை பார்த்து போலீசார் மோட்டார் சைக்கிளை நிறுத்த கைகாட்டினர். ஆனால் நிறுத்துவது போல வந்து அருகில் வந்த போது மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டினர். அப்போது அவர்களை பிடிக்க முயன்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியனை தாக்கினர். மேலும், அவர் மீது மோட்டார் சைக்கிளை மோதி விட்டு தப்பி சென்றனர்.

இதனால் போலீசார் விரட்டி சென்று மோட்டார் சைக்கிளில் பின்புறம் அமர்ந்திருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர் மதுரை மேல அனுப்பானடி தெப்பக்குளத்தை சேர்ந்த முத்துபாண்டியன் மகன் வினோத் (வயது 27) என்பதும், தப்பியோடியவர் நாகையை சேர்ந்த பொரிச்சமணி (23) என்பதும், இவர்கள் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்தை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து சாராய மூட்டைகளும், கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய பொரிச்சமணியை வலைவீசி தேடி வருகின்றனர்.

தாக்குதலில் காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் செய்திகள்