பழைய காலனி வீடுகளை பழுது பார்க்க ரூ.10½ கோடி நிதி ஒதுக்கீடு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்

பழைய காலனி வீடுகளை பழுது பார்க்க ரூ.10½ கோடி நிதி ஒதுக்கீடு என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

Update: 2019-01-01 23:00 GMT
கரூர்,


கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம், குளித்தலை, தோகைமலை மற்றும் கடவூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் பழைய காலனி வீடுகளை பழுது நீக்கி கொள்ளுவதற்கான நிதியுதவி மற்றும் வேலை உத்தரவு ஆணை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். பாராளுமன்ற துணை சாபநாயகர் தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயாபாஸ்கர் கலந்து கொண்டு பழைய காலனி வீடுகளை பழுது நீக்கி கொள்ளுவதற்கான நிதியுதவி மற்றும் வேலை உத்தரவுகளை வழங்கினர்.


அப்போது இது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவிக்கையில்,

கரூர் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட காலனி வீடுகளை பழுது நீக்கித் தர அதிகளவில் கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன. பழைய வீடுகளை பழுது நீக்க சட்டமன்ற மேம்பாட்டு நிதியை மட்டுமே பயன்படுத்தப்பட்டது. தற்போது தமிழ்நாடு முதல்–அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று சிறப்பு நிதி பெற்று ஒரு வீட்டிற்கு ரூ.50,000 வழங்கப்பட்டு வருகிறது.


கரூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக கரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 300 வீடுகளும், தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தில் 350 வீடுகளும், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் 150 வீடுகளும், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் 300 வீடுகளும், குளித்தலை ஊராட்சி ஒன்றியத்தில் 130 வீடுகளும், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 300 வீடுகளும், கடவூர் ஊராட்சி ஒன்றியத்தில் 250 வீடுகளும், தோகைமலை ஊராட்சி ஒன்றியத்தில் 314 வீடுகளும் என மொத்தம் 2094 வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு அதற்காக ரூ.10 கோடியே 47 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து வேலை உத்தரவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி குளித்தலை, கிருஷ்ணராயபுரம், தோகைமலை, கடவூர் ஆகிய ஊராட்சி பகுதிகளில் 994 வீடுகளுக்கு ரூ.4 கோடியே 97 லட்சம் மதிப்பிலான வேலை உத்தரவுகள் வழங்கப்படுள்ளது. மீதமுள்ள பகுதிகளுக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ.கீதா, வருவாய் கோட்டாட்சியர் லியாகத், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் உமாசங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புவனேஸ்வரி, மனோகரன், தவமணி, ராஜேந்திரன், வட்டாட்சியர்கள் சுரேஷ்குமார், கற்பகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்