தந்தை இறந்த துக்கத்தில் பிளஸ்-1 மாணவி தற்கொலை

திண்டுக்கல்லில் தந்தை இறந்த துக்கத்தில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2019-01-01 22:30 GMT
திண்டுக்கல், 

திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மனைவி சாந்தி (வயது 53). இந்த தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர். 3-வது மகள் வித்யஸ்ரீ (15), திண்டுக்கல் அருகே மா.மூ.கோவிலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். முதல் 2 மகள்களும் திருமணமாகி கணவர் வீட்டில் வசித்து வருகின்றனர். சுப்பிரமணி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார்.

வீட்டில் சாந்தியும், வித்யஸ்ரீயும் மட்டும் வசித்து வந்தனர். திண்டுக்கல்லில் உள்ள ஒரு நகைக்கடையில் சாந்தி வேலை பார்த்து வருகிறார். தந்தை இறந்த துக்கத்தில் வித்யஸ்ரீ கடந்த சில நாட்களாக சோகத்தில் இருந்தார். அவருக்கு தாயார் ஆறுதல் கூறினார். இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம்போல சாந்தி வேலைக்கு சென்றுவிட்டார். விடுமுறை என்பதால் வித்யஸ்ரீ வீட்டில் இருந்தார்.

இதையடுத்து காலை 9 மணி அளவில் மகள் சாப்பிட்டாளா? என்று கேட்பதற்காக சாந்தி, வித்யஸ்ரீயின் செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் சாந்தி வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வித்யஸ்ரீ தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டு இருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சாந்தி அலறி கூச்சல் போட்டார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் வித்யஸ்ரீயின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் நடத்திய விசாரணையில், தந்தை இறந்த துக்கத்தில் வித்யஸ்ரீ தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்