சுங்கச்சாவடியில் வாகன சோதனை, ரூ.22½ லட்சம் குட்கா பறிமுதல் - உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை

சேலம் அருகே சுங்கச்சாவடியில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் சரக்குவேனில் கடத்தி வரப்பட்ட ரூ.22½ லட்சம் மதிப்புள்ள குட்காவை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-01-01 22:15 GMT
கருப்பூர், 


கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக புதுக்கோட்டைக்கு ஒரு சரக்கு வேனில் குட்கா பொருட்கள் கடத்தி வரப்படுவதாக சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி மாரியப்பனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாரியப்பன் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சேலம் அருகே உள்ள கருப்பூர் சுங்கச்சாவடியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வேனை நிறுத்தினர். பின்னர் அதை ஓட்டி வந்த டிரைவர் அருள்ராஜிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். அதைத்தொடர்ந்து அந்த வாகனத்தை சோதனை செய்தனர். அதில் பண்டல், பண்டலாக பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

தொடர்ந்து அதிகாரிகள் ஒரு பண்டலை எடுத்து பிரித்து பார்த்தனர். அதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. மொத்தம் 164 பண்டல்களில் குட்கா இருந்தது. இதைத்தொடர்ந்து குட்கா மற்றும் அதை கடத்தி வரப்பட்ட சரக்குவேன் ஆகியவற்றை பறிமுதல் செய்து சேலம் நாட்டாண்மை கழக கட்டிட வளாகத்தில் உள்ள உணவு பாதுகாப்பு நியமன அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

இது குறித்து உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி மாரியப்பனிடம் கேட்ட போது, எங்களுக்கு வந்த ரகசிய தகவலின் பேரில் கருப்பூர் சுங்கச்சாவடியில் வாகன சோதனை நடத்தினோம். அப்போது சரக்கு வேனில் கடத்தி வரப்பட்ட 1,044 கிலோ எடை கொண்ட குட்கா பொருட் களை பறிமுதல் செய்து உள்ளோம். இதன் மதிப்பு ரூ.22½ லட்சம் ஆகும் என்று கூறினார்.

மேலும் செய்திகள்