கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு-அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-01-02 22:45 GMT
நாகப்பட்டினம்,

நாகையில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சந்திரா தலைமை தாங்கினார். மாவட்டத்துணை தலைவர்கள் தமிழ்ச்செல்வன், வேம்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில துணை தலைவர் மதிவாணன், மாவட்ட இணைச்செயலாளர் துரை நடராஜன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் போனஸ் ரூ.500-யை சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு வழங்கவேண்டும். குறைந்தபட்ச பென்சன் ரூ. 7 ஆயிரத்து 850 வழங்கவேண்டும். மாதம் 5-ந்தேதிக்குள் ஓய்வூதியம் வழங்கவேண்டும். ஈமக்கிரியை முன்பணம் ரூ.50 ஆயிரமும், மொத்த தொகையாக ரூ.5 லட்சமும் வழங்கவேண்டும். சிறப்பு ஓய்வூதியம் பெறும் வருவாய் கிராம ஓய்வூதியர்களுக்கு 50 சதவீதம் ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. முடிவில் மாவட்ட பொருளாளர் மரியஜெயராஜ் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்