புத்தாண்டு செலவுக்கு பணம் கொடுக்க மறுத்த த.மு.மு.க. பிரமுகர் மீது தாக்குதல் 3 பேர் கைது

புத்தாண்டு செலவுக்கு பணம் கொடுக்க மறுத்த த.மு.மு.க. பிரமுகரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-01-02 22:15 GMT
மயிலாடுதுறை,

மயிலாடுதுறை கூறைநாடு சின்னபள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் பாசித் (வயது 30). இவர், மீன் மார்க்கெட் பகுதியில் பால் ஏஜென்சி கடை நடத்தி வருகிறார். த.மு.மு.க. நாகை வடக்கு மாவட்ட பொருளாளராகவும் உள்ளார். நேற்று முன்தினம் பாசித்திடம், அதே பகுதியை சேர்ந்த ஹாஜா நிபாசுதீன் என்பவர் புத்தாண்டை கொண்டாட செலவுக்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு பாசித் பணம் தர மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஹாஜா நிபாசுதீன், அவரது நண்பர்கள் மயிலாடுதுறை பெரிய பள்ளிவாசல் தெருவை சேர்ந்த அப்துல்ரகுமான் (26), பசுபதி தெருவை சேர்ந்த ரிஸ்வான் (30), பெசன்ட் நகரை சேர்ந்த பாசித் ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு பாசித் கடைக்கு சென்றார். அப்போது அவர்கள், பாசித்தை இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு, கடையில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதில் காயம் அடைந்த பாசித் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் டெல்லிபாபு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹாஜா நிபாசுதீன், அப்துல்ரகுமான், ரிஸ்வான் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் ஹாஜா நிபாசுதீன் நண்பர் பாசித்தை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்