வங்கி கடனை திருப்பி செலுத்த முடியாததால் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை

விவசாயத்துக்காக வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-01-03 22:30 GMT
பெரும்பாவூர், 

செருதோணியை அடுத்துள்ள தோப்ராம்குடி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 37). விவசாயி. அவருடைய மனைவி ஆஷா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்தநிலையில் அங்குள்ள ஒரு வங்கியில் விவசாயத்துக்காக சந்தோஷ் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் பெய்த மழையால் விவசாய பயிர்கள் சேதமடைந்தன. இதனால் கடனை திரும்பி செலுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே வங்கியில் இருந்து கடனை செலுத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தெரிகிறது. வீடு மற்றும் நிலத்தை ஜப்தி செய்துவிடுவார்கள் என சந்தோஷ் கவலை அடைந்தார்.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட சந்தோஷ், தற்கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் முரிக்காஞ்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் சந்தோசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கி கடனை செலுத்த முடியாததால் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்