பரமத்தி ஒன்றியத்தில் ரூ.62 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு

பரமத்தி ஒன்றிய பகுதிகளில் ரூ.62 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் ஆசியாமரியம் நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2019-01-04 22:15 GMT
பரமத்தி வேலூர், 

பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பில்லூர், கோதூர், மேல்சாத்தம்பூர், நல்லூர், மணியனூர் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.62 லட்சம் மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பில்லூர் ஊராட்சி அர்த்தனாரி பாளையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் கதிரடிக்கும் களம், அதே பகுதியில் ரூ.12 ஆயிரம் மானியத்தில் கட்டப்பட்டு வரும் தனிநபர் இல்லக்கழிப்பிடங்கள், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாய கூடம் ஆகியவற்றை கலெக்டர் ஆய்வு செய்தார்.

பின்னர் அதே பகுதியில் ராஜேந்திரன் என்பவரது விவசாய நிலத்தில் ரூ.1 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பீட்டில் கற்கள் கொண்டு கரை பலப்படுத்தப்பட்டு வரும் பணியினையும், பில்லூர் உதிக்கபாளையம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் பேவர்பிளாக் சாலையினையும், மேல்சாத்தம்பூர் ஊராட்சியில் ரூ.22 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கப்பட்டு வரும் பணியினையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து நல்லூர் ஊராட்சியில் ரூ.1 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் நடப்பட்டு நீர் ஊற்றி பராமரிக்கப்பட்டு வரும் பணியினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு வரும் பணியினையும் மற்றும் மணியனூர் ஊராட்சியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வரும் பணியினையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

மேலும் மரக்கன்றுகளை சாலையோரங்களிலும், அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி வளாகங்களில் நட்டு பராமரிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார். ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி, பரமத்தி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருளாளன், சங்கர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்