ஒரகடம் அருகே சிறுவனை கடத்தியவர் கைது

ஒரகடம் அருகே சிறுவனை கடத்திய நபரை ஒரகடம் வல்லக்கோட்டை பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்து தனிப்படை போலீசார் மூலம் கைது செய்தனர்.

Update: 2019-01-04 22:15 GMT
படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் பாலூர் அடுத்த சேந்தமங்கலத்தை சேர்ந்தவர் குமரபிரசாத். இவருடைய மனைவி முருகம்மாள். இவர்களது மகன் குமரகுருவை (வயது 5) 2 நாட்களுக்கு முன்பு மர்ம நபர் ஒருவர் கடத்திச் சென்றார். இதுகுறித்து முருகம்மாள், ஒரகடம் போலீசில் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீபெரும்புதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணா தலைமையில் 3 தனிப்படை கொண்ட போலீசார் காணாமல் போன சிறுவனை தேடி வந்தனர். பின்னர் சிறுவன் குமரகுருவை திருமுல்லைவாயல் பகுதியில் போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

சிறுவனை கடத்திய மர்ம நபரை ஒரகடம் வல்லக்கோட்டை பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் வல்லக்கோட்டை பகுதியில் சிறுவனை கடத்திய நபர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ஒரகடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜ் தலைமையில் அங்கு சென்ற தனிப்படை போலீசார் அப்பகுதியில் பதுங்கி இருந்த திருவண்ணாமலை மாவட்டம் தேனிமலை பகுதி முருகன் கோவில் தெருவை சேர்ந்த மாரிமுத்து (40) என்பவரை பிடித்து விசாரித்தனர். இவர், இந்த பகுதியில் கட்டிட வேலை செய்து வந்ததும், போலீசார் சிறுவன் குமரகுருவை கடத்தியதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்