வந்தவாசி அருகே டியூசன் மையம் நடத்தி வந்தவர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்த மர்மம் கொலையா? போலீஸ் விசாரணை

வந்தவாசி அருகே விவசாய நிலத்தில் எரிந்த நிலையில் ஆண் பிணம் கிடந்தது. அவரை யாரும் எரித்துக்கொன்றார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-01-04 22:15 GMT
வந்தவாசி, 

வந்தவாசி அருகே உள்ள கூடலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 45). இவர் ஆரணியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அங்கு அவர் டியூசன் மையமும் நடத்தி வந்தார். இவருக்கு கூடலூர் கிராமத்தில் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. அங்கு அவர் விவசாயமும் செய்து வந்தார்.

இந்த நிலையில் இவரது நிலத்தில் எரிந்த நிலையில் ஆண் பிணம் கிடப்பதாக தெள்ளார் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இதில் எரிந்த நிலையில் இறந்து கிடந்தது பொன்னுசாமி என்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து பிரேதப் பரிசோதனை அங்கேயே நடந்தது.

இதுபற்றி தெள்ளார் போலீசார் வழக்குப் பதிவு செய்து பொன்னுசாமி எப்படி இறந்தார், தற்கொலை செய்து கொண்டாரா அல்லது எரித்து கொலை செய்யப்பட்டாரா அல்லது சாவில் வேறு ஏதும் மர்மம் உள்ளதா என விசாரித்து வருகின்றனர்.

இறந்த பொன்னுசாமிக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.

மேலும் செய்திகள்