கம்பத்தில் மான் கொம்புடன் 2 பேர் பிடிபட்டனர்

கம்பத்தில் மான் கொம்புடன் 2 பேர் பிடிபட்டனர்.

Update: 2019-01-04 22:15 GMT
கம்பம், 

கேரள மாநிலத்தில் ஒரு கும்பல் பாம்பு விஷம், மண்ணுளிபாம்பு, மான் கொம்பு ஆகியவை விற்பதாக கேரள வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த கும்பலை சேர்ந்தவர்களின் செல்போன் எண்களை வனத்துறையினர் சேகரித்தனர். பின்னர் கேரள வனத்துறையினர் பொதுமக்கள் பேசுவது போல் அந்த கும்பலிடம் பாம்பு விஷம் தேவை என பேசியுள்ளனர்.

இதனை நம்பிய அந்த கும்பலை சேர்ந்த 2 பேர் கம்பம் மாரியம்மன் கோவில் பகுதியில் நின்று கொண்டு இருப்பதாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கேரள வனத்துறையினர் அங்கு சாதாரண உடையில் வந்து அவர்களிடம் பேச்சுக் கொடுத்தனர். அப்போது அவர்களிடம் மான் கொம்பு இருப்பது தெரிய வந்தது. இந்தநிலையில் சாதாரண உடையில் வந்தவர்கள் கேரள வனத்துறையினர் எனத் தெரிந்ததும் சுதாரித்துக்கொண்ட அவர்கள் 2 பேரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதைத்தொடர்ந்து அவர்களை வனத்துறையினர் விரட்டிப்பிடித்து, தமிழக வனத்துறையினருக்கு கூட தகவல் கூறாமல் ஜீப்பில் ஏற்றி தேக்கடி கொண்டு சென்றனர். அங்கு அவர்களிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் உத்தமபாளையத்தை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (வயது 35) மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த சரவணன் (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த மான்கொம்பை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்