திருவிழா காலங்களில் கோவை-மதுரை ரெயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும்

திருவிழா காலங்களில் கோவை-மதுரை ரெயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Update: 2019-01-06 22:45 GMT
பழனி,

மதுரையில் இருந்து தினசரி காலை 7.45 மணிக்கு திண்டுக்கல், பழனி வழியாக கோவைக்கு பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் கோவையில் இருந்து தினசரி மதியம் 1.30 மணிக்கு மதுரைக்கு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் கோவை, பழனி மற்றும் கேரளாவை சேர்ந்த பயணிகள் மதுரைக்கு சென்று வருகின்றனர்.

பழனியில் தைப்பூச திருவிழா தொடங்கவுள்ளதையொட்டி தற்போது பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இவர்கள் ரெயில் மற்றும் பஸ்களின் மூலமே பழனிக்கு வந்து செல்கின்றனர். அதிலும் கட்டணம் குறைவு என்பதால் ரெயில் பயணத்தையே பெரும்பாலானவர்கள் விரும்புகின்றனர்.

இதனால் கோவை-மதுரை இடையே இயக்கப்படும் ரெயிலில் எப்போதும் பயணிகள் கூட்டம் இருக்கும். அதிலும் திருவிழா காலங்களில் இந்த ரெயிலில் இருமடங்கு கூட்டம் இருக்கும். அதன்படி தைப்பூச திருவிழா தொடங்க உள்ளதையொட்டி பழனிக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.

ஆனால் கோவை-மதுரை ரெயிலில் கூடுதல் பெட்டிகள் தற்போது வரை இணைக்கவில்லை. இதனால் பயணிகள் இருக்கை கிடைக்காமல் நின்றபடியே பயணம் செய்யும் அவலம் உள்ளது. மேலும் சரக்கு களை ஏற்றும் பெட்டியிலும் பயணிகள் கூட்டம் தற்போது அலைமோதுகிறது. எனவே திருவிழா காலங்களிலாவது பழனி வழியாக இயக்கப்படும் ரெயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகள்