வேலூரில் உதவி சிறைக்காவலர்களுக்கான தேர்வு - 306 பேர் எழுதினர்

வேலூர் ஊரீசு கல்லூரியில் நடந்த உதவி சிறைக் காவலர்களுக்கான எழுத்து தேர்வை 306 பேர் எழுதினர்.

Update: 2019-01-06 23:15 GMT
வேலூர்,

தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் 14 பெண் சிறைக்காவலர்கள் உள்பட 30 உதவி சிறைக்காவலர்களுக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. வேலூர் மாவட்டத்தில் 576 பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு வேலூர் ஊரீசு கல்லூரியில் எழுத்து தேர்வு நடந்தது. காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது.

காலை 9 மணி முதல் தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு வரத் தொடங்கினர். பலத்த சோதனைக்கு பின்னரே தேர்வர்கள் தேர்வு அறைகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். செல்போன், கால்குலேட்டர் போன்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதேபோன்று 10.30 மணி வரை வந்தவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். மதியம் 1 மணி வரை தேர்வு நடந்தது.

விண்ணப்பித்தவர்களில் 270 பேர் தேர்வு எழுதவரவில்லை. 306 பேர் தேர்வு எழுதினர். தேர்வை கண்காணிக்க முதன்மை கண்காணிப்பாளர்கள், தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் என 20 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர். மேலும் பறக்கும் படையினர் தேர்வு மையத்தில் ஆய்வு செய்து தேர்வில் முறைகேடு எதுவும் நடக்கிறதா என்பது குறித்து கண்காணித்தனர்.

தேர்வு காலை மற்றும் மதியம் என 2 வேளைகளில் நடந்தது. தேர்வு மையங்கள் மற்றும் தேர்வு நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. தேர்வு மையத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்