பருவகால மாற்றங்களால் நதிகளை இணைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது பி.ஆர்.பாண்டியன் பேட்டி

பருவகால மாற்றங்களால் நதிகளை இணைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

Update: 2019-01-07 23:00 GMT
தஞ்சாவூர்,


நதிநீர் இணைப்பின் அவசியத்தை உணர்த்த, விவசாயிகளுக்கு அர்ப்பணிப்பாக ‘‘ஒசரும், ஒசரும் பாரு’’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு பாடல் குறுந்தகடு வெளியீடு தஞ்சையில் நேற்று நடந்தது. இந்த விழாவுக்கு பாடலை எழுதி தயாரித்த திருச்சி ராஜ்குமார் வரவேற்றார்.

குறுந்தகட்டை தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் வெளியிட, தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் பெற்றுக்கொண்டார்.

பின்னர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:–

இந்தியா முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இயற்கை வளங்கள், மண் வளங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இயற்கை சீற்றத்தால் மரங்கள் அழியத்தொடங்கி உள்ளன. இந்த நிலையில் பருவகால மாற்றம் ஏற்பட்டு தமிழகம் தண்ணீர் தட்டுப்பாட்டால் தொடர்ந்து 7 ஆண்டுகளாக குறைவான மழை அளவை பெற்று வறட்சி பாதித்த மாநிலமாக மாறி உள்ளது.


தொடர்ந்து ஒரிரு மாதங்களில் பெய்ய வேண்டிய மழை ஓரிரு நாட்களில் கொட்டித்தீர்க்கிறது. அந்த தண்ணீரை சேமிக்க வழியில்லாமல் கடலில் கலக்கிறது. விவசாயம் பாதிக்கப்படுகிறது. மக்கள் குடிநீருக்காக திண்டாடுகிறார்கள். எனவே இன்றைக்கு நதிகளை இணைக்க வேண்டிய தேவை, நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதை உணர்த்தும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது.

உயர்மின்கோபுரங்கள் அமைப்போம் என்ற பெயரில் விளை நிலங்களை அபகரிப்பதால் பொதுமக்கள் போராடினால், அதை நிறைவேற்றியே தீருவோம் என தமிழக அரசு உறுதி ஏற்றுள்ளது. அதேபோல் நெய்வேலியில் 3–வது சுரங்கம் வெட்டுவதற்கு விவசாயிகள் அனுமதி இல்லாமல் நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இது கண்டிக்கத்தக்கது. விவசாயிகள் நிலத்தை அபகரித்து தான் திட்டங்கள் செயல்படுத்துவோம் என அரசு சொல்லுமேயானால் இந்த அரசுக்கு எதிராக நாங்கள் வாக்களிப்போம் என சபதமேற்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் பாடகர்கள் கோபு, குமார், திரைப்பட இயக்குனர் ராசி.மணிவாசகம், நகைச்சுவை பேச்சாளர் அறந்தாங்கி நிஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்