உப்பிலியபுரம் அருகே இரண்டாக பிளந்த மரம் மின்கம்பம் மீது விழுந்து தீப்பிடித்ததால் பரபரப்பு

உப்பிலியபுரம் அருகே மரம் இரண்டாக பிளந்து மின்கம்பம் மீது விழுந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-01-07 22:45 GMT
உப்பிலியபுரம்,

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் அருகேயுள்ள கோட்டப்பாளையம் கோட்டை மேட்டுப்பகுதியில் சாலையோரம் பழமையான புளியமரம் ஒன்று உள்ளது. இந்த மரம் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணியளவில் இரண்டாக பிளந்து அருகில் இருந்த மின்கம்பம் மீது விழுந்தது. இதில் அந்த மின்கம்பம் உடைந்ததுடன் உடைந்த மரம் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இதனால், கோட்டப்பாளையம்-கொப்பம்பட்டி இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைக்கண்ட பொதுமக்கள் மின்சார வாரியத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டது.

பின்னர், மின் வாரிய ஊழியர் சவரிமுத்து உப்பிலியபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில், தீயணைப்பு நிலைய அதிகாரி சத்தியவர்த்தனன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பின்னர், அந்த புளியமரம் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டது.

நேற்று காலை மின்சார வாரிய ஊழியர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவு நடைபெற்ற இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்