வனப்பகுதியில் 2 யானைகள் மோதல்: தந்தத்தால் குத்தியதில் 25 வயதான யானை சாவு

ராயக்கோட்டை அருகே வனப்பகுதியில் 2 யானைகள் மோதிய போது தந்தத்தால் குத்தியதில் 25 வயதான யானை செத்தது.

Update: 2019-01-09 22:30 GMT
ராயக்கோட்டை, 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட ராயக்கோட்டை அருகே உள்ளது ஊடேதுர்க்கம் காப்புக்காடு. இங்கு 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் இரவு நேரத்தில் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் நேற்று சாத்தனக்கல் வனப்பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று இறந்து கிடப்பதாக மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கிக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவர் மற்றும் ராயக்கோட்டை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அதில் அந்த யானையை, மற்றொரு ஆண் யானை தனது தந்தத்தால் குத்தியதும், இதில் படுகாயம் அடைந்த அது அந்த இடத்திலேயே பரிதாபமாக செத்ததும் தெரியவந்தது. ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் உள்ள யானைகள் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் இரு ஆண் யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு யானை, இதனை தந்தத்தால் குத்தி கொன்றுள்ளது எனவும், யானை இறந்து 4 நாட்கள் இருக்கலாம் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

இது குறித்து வனத்துறை கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் அங்கு சென்று இறந்த யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் யானையின் உடல் வனப்பகுதியிலேயே குழி தோண்டி புதைக்கப்பட்டது.

மேலும் இறந்த யானையின் தந்தத்தின் ஒரு பகுதி உடைந்துள்ளது. அதனை வனத்துறையினர் அப்பகுதியில் தேடி பார்த்தனர். ஆனால் உடைந்த தந்தத்தின் பகுதியை காணவில்லை. இதை மர்ம நபர் யாரோ திருடி சென்றிருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்