பேட்ட படம் வெளியான தினத்தில் சினிமா தியேட்டரில் ரஜினிரசிகர் திருமணம்

பேட்ட படம் வெளியான தினத்தில் தஞ்சை சினிமா தியேட்டரில் ரஜினி ரசிகர் திருமணம் நடந்தது.

Update: 2019-01-10 23:00 GMT
தஞ்சாவூர்,

நடிகர் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படம் நேற்று வெளியானது. தஞ்சையிலும் இந்த படம் வெளியானது. ரஜினி படம் வெளியானதை தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் ஆரவாரத்துடன் அதிர்வேட்டுகள் முழங்க, கொண்டாடினர்.

இதையொட்டி ஜி.வி.காம்ப்ளக்ஸ் தியேட்டரில் ரஜினிரசிகரான தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்த ஜோதிராமன் (வயது 29), ஒன்பத்து வேலியை சேர்ந்த உஷாராணி (29) என்பவருக்கும் திருமணம் நடந்தது. இதையொட்டி மணமக்களின் உறவினர்களும் தியேட்டர் முன்பு அதிகாலையிலேயே திரண்டனர்.


காலை 8 மணிக்கு மங்கல வாத்தியம் முழங்க புரோகிதர் மந்திரம் ஓத ஜோதிராமன், உஷாராணி கழுத்தில் தாலி கட்டினார். இதையடுத்து ரஜினி ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். பின்னர் மணமக்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக ஜூபிடர் தியேட்டருக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் ரஜினிகாந்தின் பேட்டை திரைப்படத்தை மணக்கோலத்துடன் பார்த்து ரசித்தனர்.

மேலும் மணமக்களை தஞ்சை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், ரஜினி ரசிகர்கள் வாழ்த்தினர். மேலும் மணமக்களுக்கு 4 கிராம் தங்க தாலி, ரூ.5001 ரொக்கம், கட்டில், மெத்தை, மளிகை பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் என மொத்தம் ரூ.2 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டன.


இது குறித்து ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் ரஜினிகணேஷ் கூறுகையில், ‘‘பேட்ட திரைப்படம் வெளியாகிற நாளில் ஏழை பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து ஒன்றியம் வாரியாக ஒரு ஜோடியை தேர்வு செய்ய முடிவு செய்தோம். அதன்படி மிகவும் ஏழ்மையான உஷாராணி– ஜோதிராமனை தேர்வு செய்தோம். உஷாராணிக்கு தந்தை இல்லை. அவரையும், அவருடைய 2 சகோதரிகளையும் தாய் தான் பராமரித்து வருகிறார். இதனால் அவரையும், திருப்பூரில் உள்ள ஜவுளி நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஏழை குடும்பத்தை சேர்ந்த ஜோதிராமனையும் தேர்வு செய்து திருமணத்தை நடத்தினோம். இருவரும் ரஜினி ரசிகர்கள் ஆவார்கள். மார்கழி மாதத்தையும் பொருட்படுத்தாமல் அவர்கள் திருமணம் செய்ய ஒப்புக்கொண்டனர்.’’என்றார்.


இது குறித்து மணமகன் ஜோதிராமன் கூறுகையில், ‘‘எனக்கு சிறுவயது முதலே ரஜினியை பிடிக்கும். அவர் படம் வெளியான அன்றே பார்த்து விடுவேன். ரஜினி ரசிகர்கள் முன்னிலையில் எனது திருமணம் நடந்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. பேட்ட திரைப்படம் வெளியான நாளில் எனது திருமணம் நடந்தது இரட்டிப்பு மகிழ்ச்சி’’என்றார்.

மணமகள் உஷாராணி கூறுகையில், ‘‘ரஜினிகாந்த் திரைப்படம் வெளியான நாளில் எனது திருமணம் நடந்தது ரொம்ப சந்தோ‌ஷமாக உள்ளது’’என்றார்.

மேலும் செய்திகள்