சென்னையில் இன்று நடக்க இருந்த செவிலியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கு தடை

சென்னையில் இன்று நடக்க இருந்த செவிலியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. தமிழ்நாடு சுகாதாரத்துறை ஊழியர்கள் நலச்சங்க செயலாளர் கார்த்திக், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

Update: 2019-01-10 23:00 GMT
மதுரை,

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரியில் 11.1.2019 அன்று (அதாவது இன்று) காலை 10.30 மணியளவில் செவிலியர் இடமாறுதல் கலந்தாய்வு நடக்கிறது என்று மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவை இயக்குனர் சார்பில் கடந்த 7-ந்தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இடமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள விரும்பும் செவிலியர்கள் தற்போது பணியாற்றும் இடத்தில் ஒரு வருடம் பணியாற்றி, அதற்கான சான்றிதழை கலந்தாய்வில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. கலந்தாய்வு நடப்பதற்கு 4 நாட்களுக்கு முன்னதாக அதற்குரிய அறிவிப்பை 7-ந்தேதி தான் வெளியிட்டார்கள்.

இதனால் இடமாறுதல் பெற விரும்பும் செவிலியர்கள் உடனுக்குடன் ஒரு வருடம் பணியாற்றியதற்கான சான்றிதழ் பெற முடியாமல் தவிக்கிறார்கள். மேலும் எந்தெந்த ஊர்களில் எத்தனை இடங்கள் காலியாக உள்ளன என்ற தகவல் இடமாறுதல் அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை.

செவிலியர் கலந்தாய்வுக்கான நடைமுறைகளையும், வழிகாட்டுதல்களையும் கடந்த 2007-ம் ஆண்டு தமிழக அரசு கூறி உள்ளது. முழுமையான தகவலை குறிப்பிடாமல் அவசர கதியில் தற்போது இடமாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். எனவே செவிலியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கு கடந்த 7-ந்தேதி வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசின் வழிகாட்டுதல்களின்படி உரிய அவகாசம் வழங்கியும், முழுமையான தகவல்களுடனும் அறிவிப்பு வெளியிட்டு கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், செவிலியர் கலந்தாய்வுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்