பாரபட்சமின்றி நிவாரணம் வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டம் 270 பேர் கைது

திருவாரூர், மன்னார்குடியில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாரபட்சமின்றி நிவாரணம் வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது. இதில் 8 பெண்கள் உள்பட 270 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-01-10 23:00 GMT
திருவாரூர்,

கஜா புயலால் பாதிக்கப்பட்ட கூரை, ஓட்டு, தொகுப்பு, பசுமை மற்றும் மாடி வீடுகளுக்கும் பாரபட்சமின்றி நிவாரணம் முழுமையாக வழங்கிட வேண்டும். பாதிக்கப்பட்ட வேளாண் பயிர்களுக்கும் மற்றும் மரங்களுக்கும் உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும். புயல் கரையை கடந்து 50 நாட்களுக்கு மேல் ஆகியும் முழுமையாக நிவாரணம் வழங்காததை கண்டித்தும் திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து தாசில்தார் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தது.

அதன்படி திருவாரூர் தாசில்தார் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்திற்கு மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செல்வராசு தலைமை தாங்கினார். இதில் மாநிலக்குழு உறுப்பினர் மாசிலாமணி, மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் வீராச்சாமி, ஜோசப், நாகராஜன், முருகானந்தம், ஒன்றிய செயலாளர்கள் புலிகேசி (திருவாரூர்), கேசவராஜ் (கொரடாச்சேரி), நகர செயலாளர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது தாலுகா அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் 8 பெண்கள் உள்பட 70 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மன்னார்குடி தாசில்தார் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம் தலைமை தாங்கினார். இதில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செல்வராஜ், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மாலாபாண்டியன், அம்புஜம், ஒன்றிய செயலாளர்கள் வீரமணி (மன்னார்குடி), மாரிமுத்து (கோட்டூர்), மன்னார்குடி நகர செயலாளர் கலைச்செல்வன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் துரை.அருள்ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேரை மன்னார்குடி போலீசார் கைது செய்தனர். முன்னதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மன்னார்குடி நகராட்சி அலுவலகம் அருகில் இருந்து காந்திரோடு, கடைத்தெரு வழியாக தாசில்தார் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தனர்.

இதேபோல் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன் தலைமை தாங்கினார். மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் வையாபுரி, மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சந்திரராமன், ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சந்திரசேகர ஆசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றிய செயலாளர் பாஸ்கர், நகர செயலாளர் முருகேசன், விவசாய சங்க நகர தலைவர் வாசுதேவன், நகர செயலாளர் சுந்தர் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்