திருவள்ளூர் அருகே மதுக்கடை சுவரில் துளைபோட்டு திருட்டு

திருவள்ளூர் அருகே மதுக்கடை சுவரில் துளைபோட்டு மது பாட்டில்கள் திருடப்பட்டது.

Update: 2019-01-10 22:45 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த காக்களூர் பகுதியில் மதுக்கடை உள்ளது. இந்த கடையில் மேற்பார்வையாளராக சண்முகம் (வயது 30) உள்ளார். விற்பனையாளர்களாக முரளி, ராமு, பாபு ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மேற்பார்வையாளர் சண்முகம் வழக்கம் போல கடையை பூட்டிவிட்டு பணியாளர்களுடன் வீட்டுக்கு சென்றார்.

நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் கடையின் பக்கவாட்டு சுவரில் ஆட்கள் நுழையும் அளவுக்கு துளை போடப்பட்டிருப்பதை பார்த்தனர்.

உடனடியாக அவர்கள் இதுகுறித்து மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து பார்த்தனர். கடையில் இருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்களை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்து சண்முகம் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். மோப்பநாய் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்