கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முற்றுகை சேவல் சண்டை நடத்த அனுமதிக்க கோரிக்கை

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவில்பட்டி பகுதியில் சேவல் சண்டை நடத்த அனுமதிக்க கோரி உதவி கலெக்டர் அலுவலகத்தை பாரதீய கிசான் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2019-01-11 22:30 GMT
கோவில்பட்டி,

நமது நாட்டின் முதுகெலும்பாக இருக்கக்கூடிய நாட்டு கோழி இனங்களை பாதுகாக்க வேண்டும். வெளிநாட்டு நிறுவனங்களின் சதியால் சேவல் சண்டை தடை செய்யப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான நாட்டு கோழி இனங்கள் அழிக்கப்பட்டு, வெளிநாட்டு நிறுவனங்களின் தரமற்ற கோழி முட்டை, இறைச்சியை பொதுமக்கள் உண்ணும் அவலநிலை உள்ளது. எனவே கோழி சண்டைக்கு விதித்த தடையை நீக்க வேண்டும். தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சேவல் சண்டை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பாரதீய கிசான் சங்கத்தினர் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.

சங்க மாவட்ட தலைவர் வக்கீல் ரங்கநாயகலு, செயலாளர் பரமேசுவரன், இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் லட்சுமிகாந்தன், ஒன்றிய தலைவர் ஜெயராமன், செயலாளர் கிருஷ்ணசாமி, முருகன், மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள், சேவல்களையும் எடுத்து வந்து, கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள், உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் சூரியகலாவிடம் கோரிக்கை மனு வழங்கி விட்டு, கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்