கோபி அருகே பரிதாபம்: வீட்டு வாசலில் விளையாடிய சிறுமி கீழே விழுந்து சாவு

கோபி அருகே வீட்டு வாசலில் விளையாடிய சிறுமி கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-01-11 22:30 GMT

கடத்தூர்,

கோபி மொடச்சூரை சேர்ந்தவர் தர்மதுரை. அந்த பகுதியில் உள்ள ஜோன்பப்படி கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கமலேஷ்வரி. இவர்களுடைய மகன் கிருபாகரன் (வயது 8). மகள் சன்மதினா (7).

சன்மதினா அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 2–ம் வகுப்பு படித்து வந்தார். பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் விழாவையொட்டி பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. அதனால் தர்மதுரை சன்மதினாவை கோபி கொளவிக்கரடில் உள்ள தன்னுடைய மாமியார் வீட்டில் விட்டிருந்தார்.

இந்த நிலையில் பாட்டி வீட்டில் இருந்த சன்மதினா நேற்று முன்தினம் இரவு வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டு இருந்தாள். அப்போது கால் தவறி தரையில் விழுந்தாள். இதில் அவருக்கு பின்தலையில் படுகாயம் ஏற்பட்டது. உடனே வீட்டில் இருந்தவர்கள் பதறி அடித்து சிறுமியை மீட்டு ஆம்புலன்சில் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். ஆனால் செல்லும் வழியிலேயே சன்மதினா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கோபி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்கள். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்த சிறுமி சன்மதினாவின் உடலை பார்த்து அவருடைய உறவினர்கள் கதறி துடித்தது பார்க்க பரிதாபமாக இருந்தது.

மேலும் செய்திகள்