சென்னை குரோம்பேட்டையில் கள்ளக்காதலை கண்டித்ததால் தாயை எரித்துக்கொன்ற மகள் கள்ளக்காதலனுடன் கைது

சென்னை குரோம்பேட்டையில் கள்ளக்காதலை கண்டித்ததால் தாயை எரித்துக்கொலை செய்த மகள் மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-01-11 23:15 GMT
தாம்பரம்,

சென்னையை அடுத்த குரோம்பேட்டை மீனாட்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சதாசிவம். இவருடைய மனைவி பூபதி(வயது 58). இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன். கணவரும், மகனும் இறந்துவிட்டதால் பூபதி, தனது கடைசி மகள் நந்தினி(27) உடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். அருகில் உள்ள வீடுகளில் வீட்டு வேலைகளும் செய்து வந்தார்.

நந்தினியின் கணவர் கண்ணன், கட்டிட ஒப்பந்ததாரர் ஆவார். இவர்களுக்கு சஞ்சய், அஜய் என 2 மகன்கள் உள்ளனர்.

கடந்த 7-ந்தேதி வீட்டு வேலைகள் செய்துவிட்டு தனது வீட்டுக்கு வந்த பூபதி, படுத்து தூங்கினார். சிறிது நேரத்தில் உடலில் எரியும் தீயுடன் வெளியே ஓடிவந்த பூபதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அன்று மாலையே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி நந்தினி அளித்த புகாரின்பேரில் குரோம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் தீயில் கருகி இறந்த பூபதிக்கு உடல் பகுதியில் மட்டும்தான் தீக்காயம் இருந்தது. தலை பகுதியில் தீக்காயம் இல்லை. எனவே அவர், எரித்துக்கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இது குறித்து விசாரிக்க தாம்பரம் போலீஸ் உதவி கமிஷனர் அசோகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் லட்சுமி, பிரபாகரன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

அவர்களுக்கு நந்தினி மீது சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், தனது கள்ளக்காதலை கண்டித்ததால் தாயை எரித்துக் கொன்றதாக திடுக்கிடும் தகவலை போலீசாரிடம் தெரிவித்தார்.

இது தொடர்பாக போலீசார் கூறியதாவது:-
கணவர் கண்ணன், மகன்கள் சஞ்சய், அஜய் ஆகியோரோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நந்தினிக்கு, அதே பகுதியை சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரரான முருகன்(47) என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. தன்னைவிட 20 வயது கூடுதலான அவருடன் நெருங்கி பழகி, உல்லாசமாக இருந்து வந்தார்.

கணவர் மற்றும் தாயார் வேலைக்கு சென்றபிறகு வீட்டில் தனியாக இருக்கும் நந்தினி கள்ளக்காதலன் முருகனை போன் செய்து வரவழைத்து அவருடன் உல்லாசத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். அவர் வசிப்பது தனி வீடு என்பதாலும், அருகில் வேறு வீடுகள் இல்லாததாலும் இது அவர்களுக்கு நல்ல வசதியாக இருந்தது.

இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினருக்கு அரசல் புரசலாக தெரியவந்தது. இதுபற்றி அவர்கள் நந்தினியின் தாயார் பூபதி மற்றும் கணவர் கண்ணனிடம் கூறினர். அவர்கள், நந்தினியை கண்டித்தனர். ஆனால் அதன்பிறகும் நந்தினி, முருகனுடன் உல்லாச வாழ்க்கையை தொடர்ந்து வந்து உள்ளார்.

இதற்கு இடையூறாக யார் வந்தாலும் அவர்களை தீர்த்துக்கட்ட கள்ளக்காதலன் முருகனுடன் சேர்ந்து திட்டம் தீட்டினார். கணவர் கண்ணனை முதலில் தீர்த்துக்கட்ட முடிவு செய்து இருந்ததாகவும், ஆனால் அதற்கு வாய்ப்பு அமையாததால் அடிக்கடி கள்ளக்காதலை கைவிட வலியுறுத்தி வரும் தனது தாயார் பூபதியின் கதையை முடிக்க இருவரும் திட்டம் தீட்டினர்.

அதன்படி கடந்த 7-ந்தேதி வேலை முடிந்து வீட்டுக்கு வந்த தாய் பூபதிக்கு ரத்தக்கொதிப்பு, சர்க்கரை வியாதிகளுக்கான மாத்திரைகளை பாசமாக எடுத்து கொடுத்து தூங்க வைத்த நந்தினி, அவர் நன்றாக அயர்ந்து தூங்கிய பிறகு வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து அவரது புடவையில் ஊற்றி தீ வைத்து விட்டு எதுவும் தெரியாததுபோல் குளியல் அறைக்கு சென்று விட்டார்.

உடலில் எரிந்த தீயுடன் பூபதி வெளியே ஓடிவந்து விழுந்தார். இதை பார்த்து அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். அப்போது நந்தினியும் எதுவும் தெரியாததுபோல் ஓடிவந்து உடல் கருகி கிடந்த தனது தாயை பார்த்து கதறி அழுதார்.

பின்னர் தாயை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி பூபதி இறந்து விட்டார். இதனால் தன்மீது யாரும் சந்தேகப்பட மாட்டார்கள் என நினைத்து இருந்த நேரத்தில் அவரை பிடித்து சந்தேகத்தின்பேரில் விசாரித்தபோது, தாயை எரித்துக்கொன்றதை ஒப்புக்கொண்டார்.

இவ்வாறு அவரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் நந்தினி மற்றும் அவரது கள்ளக்காதலன் முருகன் இருவரையும் கைது செய்தனர். இருவரையும் தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கள்ளக்காதலை கைவிட்டு கணவர், குழந்தைகளுடன் குடும்பம் நடத்தும்படி அறிவுரை கூறியதற்காக பெற்ற தாயை மகளே எரித்துக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்