முதல்-மந்திரியுடன், உத்தவ் தாக்கரே ரகசிய சந்திப்பு தேசியவாத காங்கிரஸ் தலைவர் குற்றச்சாட்டு

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை ரகசியமாக சந்தித்து பேசியதாக தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் குற்றம்சாட்டி உள்ளார்.

Update: 2019-01-11 22:52 GMT
மும்பை,

தேசியவாத காங்கிரஸ் கட்சி ‘நிராதர் பரிவர்த்தன் யாத்ரா’ என்ற பெயரில் 30 நாட்களுக்கு, 23 நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறது. இந்த பிரசாரம் நேற்று முன்தினம் ராய்காட்டில் தொடங்கியது. இதில், தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல், முன்னாள் முதல்-மந்திரி அஜித் பவார் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஜெயந்த் பாட்டீல் பேசியதாவது:-

பா.ஜனதா கட்சியை கடுமையாக விமா்சித்து வரும் நிலையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை மும்பை பாந்திரா-குர்லா காம்ப்ளக்சில் உள்ள ஓட்டலில் நள்ளிரவு நேரத்தில் ரகசியமாக சந்தித்து பேசி உள்ளார். அவர்கள் என்ன விவாதித்தார்கள் என்று தெரியவேண்டும். பா.ஜனதாவும், சிவசேனாவும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்தே போட்டியிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சிவசேனா பதில்

தேவேந்திர பட்னாவிஸ்- உத்தவ் தாக்கரே ரகசிய சந்திப்பு குறித்து சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறும்போது, ‘‘இதை தேசியவாத காங்கிரஸ் தலைவரின் முதிர்ச்சியற்ற கருத்து என்று தான் கூறுவேன். உத்தவ் தாக்கரே, முதல்-மந்திரியை ரகசியமாக சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள அரசுகளில் நாங்கள் பா.ஜனதாவுடன் கூட்டணியில் உள்ளோம்.

மேலும் பட்னாவிஸ் மாநிலத்தின் முதல்-மந்திரி. எனவே எப்போது வேண்டுமானாலும் உத்தவ் தாக்கரே அவரை சந்தித்து பேசலாம்’’ என்றார்.

மேலும் செய்திகள்