கடலூரில் 12 புதிய பஸ்கள் அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்தார்

கடலூரில் இருந்து சென்னை, சேலத்துக்கு 12 புதிய பஸ் போக்குவரத்தை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2019-01-13 22:45 GMT
கடலூர், 

தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.140 கோடியில் வாங்கப்பட்ட 555 புதிய பஸ்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 7-ந் தேதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மொத்தமுள்ள 555 புதிய பஸ்களில் விழுப்புரம் கோட்டத்துக்கு 82 பஸ்கள் வழங்கப்பட்டன. இதில் கடலூர் மண்டலத்துக்கு 29 பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் முதல்கட்டமாக 12 பஸ்கள் கடலூரில் இருந்து சென்னை, சேலம் ஆகிய ஊர்களுக்கு இயக்குவதற்கான தொடக்க விழா கடலூர் பஸ்நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி ராஜகிருபாகரன் தலைமை தாங்கினார். கடலூர் மண்டல மேலாளர் சுந்தரம் வரவேற்றார்.

விழாவில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு 12 புதிய பஸ்களின் போக்குவரத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் கடலூரில் இருந்து பண்ருட்டி, உளுந்தூர்பேட்டை வழியாக 4 பஸ்கள், வடலூர், விருத்தாசலம் வழியாக 2 பஸ்கள் சேலத்துக்கும், புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு ஒரு பஸ்சும் இயக்கப்படுகிறது. அதேபோல் சிதம்பரத்தில் இருந்து வடலூர், விருத்தாசலம் வழியாக சேலத்துக்கு ஒரு பஸ், கடலூர், புதுச்சேரி, திண்டிவனம் வழியாக சென்னைக்கு 4 பஸ்களும் இயக்கப்படுகிறது.

விழாவில் நகரசபை முன்னாள் தலைவர் குமரன், முன்னாள் துணை தலைவர் சேவல் ஜி.குமார், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.ஆர்.பாலகிருஷ்ணன், மண்டல துணை மேலாளர்(தொழில்நுட்பம்) சேகர்ராஜ், உதவி மேலாளர்கள் முருகானந்தம்(இயக்கம்), கே.சுந்தரம்(வணிகம்), கமலக்கண்ணன்(சட்டம்), தியாகராஜன்(நியமனம்), பன்னீர்செல்வம், கிளை மேலாளர்கள் சுந்தரராகவன், மோகனசுந்தரம், தொழிற்சங்க நிர்வாகி நவநீதகண்ணன், முன்னாள் கவுன்சிலர்கள் தமிழ்செல்வம், ராமச்சந்திரன் மற்றும் போக்குவரத்து கழக ஊழியர்கள், தொழிற்சங்கத்தினர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்