புவனகிரி அருகே தீக்குளித்து மெக்கானிக் தற்கொலை அண்ணன் இறந்த சோகத்தில் விபரீத முடிவு

புவனகிரி அருகே தனது அண்ணன் இறந்ததால், சோகத்தில் இருந்த மெக்கானிக் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-01-19 22:45 GMT

பரங்கிப்பேட்டை,

புவனகிரி அருகே உள்ள தெற்குதிட்டை வடக்கு தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மகன்கள் சக்திவேல்(வயது 36), முரளி(34) ஆவார்கள். இவர்களில் சக்திவேல் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். முரளி மோட்டார் சைக்கிள் மெக்கானிக்காக உள்ளார். இந்த நிலையில், கடந்த 11–ந்தேதி வீட்டில் இருந்த சக்திவேல் உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

அண்ணன் இறந்த வேதனையில் இருந்து முரளியால் மீண்டு வர முடியாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த முரளி, தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடல் முழுவதும் தீ பற்றி எரிந்த நிலையில், முரளி சத்தமிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் உடல் கருகிய முரளி பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது உடலை பார்த்து பெற்றோர், மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதுபற்றி தகவல் அறிந்த புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்–இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் முரளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கலியபெருமாள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தனது அண்ணன் பிரிந்து வாழ முடியாத சோகத்தில், தம்பியும் அவரை போன்று தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகள்