சேத்தியாத்தோப்பு அரசு ஊழியரின் வங்கி கணக்கில் இருந்த பணம் அபேஸ்

சேத்தியாத்தோப்பில் உள்ள அரசு ஊழியரின் வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் பணத்தை மர்ம மனிதர் அபேஸ் செய்து சென்றார். இதையடுத்து ஏ.டி.எம். மைய கண்காணிப்பு கேமராவில் காட்சி மூலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2019-01-19 23:00 GMT

சேத்தியாத்தோப்பு,

சேத்தியாத்தோப்பு வடக்கு சென்னிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் பாலசுப்பிரமணியன்(வயது 50). சேத்தியாத்தோப்பு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் அரசு ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் சேத்தியாத்தோப்பு வடக்கு மெயின்ரோட்டில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க சென்றார்.

அப்போது அங்கிருந்த மர்ம நபர் ஒருவர், அவரிடம் பேச்சு கொடுத்துக் கொண்டு இருந்தார். இந்த நிலையில் பாலசுப்பிரமணியம் பணம் எடுப்பதற்காக பயன்படுத்திய ரகசிய குறியீட்டு எண்ணை அந்த மர்ம நபர் பார்த்து தெரிந்து கொண்டார்.

இதன்பின்னர் பாலசுப்பிரமணியத்திடம் உங்களது ஏ.டி.எம். கார்டை தாருங்கள், பார்த்துவிட்டு தருகிறேன் என்று கூறியுள்ளார். இதை நம்பி அவர் கொடுத்தார். இந்த நிலையில் மர்ம நபர் தனது கையில் வைத்திருந்த மற்றொரு ஏ.டி.எம். கார்டை பாலசுப்பிரமணியத்திடம் கொடுத்துவிட்டார். இதை வாங்கி கொண்டு அவரும் அங்கிருந்து வீட்டுக்கு சென்றுவிட்டார்.

சில மணி நேரத்தில், பாலசுப்பிரமணியத்தின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.18 ஆயிரம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன் பின்னர் தான், தன்னிடம் மர்ம நபர் ஏ.டி.எம். கார்டை கொடுத்து நூதன முறையில் தன்னை ஏமாற்றி, பணத்தை அபேஸ் செய்து இருப்பது அவருக்கு தெரியவந்தது.

இதுகுறித்து பாலசுப்பிரமணியன் சேத்தியாத்தோப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பந்தப்பட்ட ஏ.டி.எம். மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி அதன் மூலமும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்