பலாத்காரம் செய்யப்பட்டு குழந்தை பெற்ற கல்லூரி மாணவி சாவு

பலாத்காரம் செய்யப்பட்டு குழந்தை பெற்ற கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Update: 2019-01-19 22:15 GMT
ஊத்தங்கரை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் ஊத்தங்கரையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் மாணவிக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதனால் அவரை பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று காட்டினார்கள். அப்போது அந்த மாணவி கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. மேலும் மாணவிக்கு ஆண் குழந்தை இறந்து பிறந்தது. இது குறித்து மாணவியின் பெற்றோர் கல்லாவி போலீசில் புகார் செய்தனர்.

அதில் புங்கனை கிராமத்தை சேர்ந்த தொழிலாளி தமிழரசன் (வயது 37) என்பவர் ஆசை வார்த்தை கூறி தனது மகளை பலாத்காரம் செய்து கர்ப்பிணி ஆக்கி ஏமாற்றி விட்டதாக கூறியிருந்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழரசனை தேடி வந்தனர். இந்த நிலையில் தமிழரசனை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே பிரசவத்திற்கு பிறகு உடல் நலக்குறைவால் ஊத்தங்கரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக கல்லாவி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்