ரூ.512 கோடியில் கிருஷ்ணகிரி - திண்டிவனம் நெடுஞ்சாலை பணிகள் தொடக்கம் அசோக்குமார் எம்.பி. தகவல்

ரூ.512 கோடி மதிப்பில் கிருஷ்ணகிரி - திண்டிவனம் நெடுஞ்சாலை பணிகள் தொடங்கப்பட உள்ளதாக அசோக்குமார் எம்.பி. கூறினார்.

Update: 2019-01-19 22:45 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில் காந்தி சாலையில், எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதற்கு தொகுதி செயலாளர் காத்தவராயன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன் வரவேற்றார். நிகழ்ச்சியில், கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் எம்.பி.யுமான அசோக்குமார், சிறுபான்மையினர் நலப்பிரிவு இணை செயலாளர் முஹம்மத்ஜான், தலைமை கழக பேச்சாளர் வெங்கட்ராமன் ஆகியோர் பேசினார்கள்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.பி. பேசியதாவது:-
மறைந்த முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் மக்களை விரும்பிய தலைவர்கள். அதே போல மக்கள் விரும்பிய தலைவர்களாக அவர்கள் விளங்கினார்கள். அவர்களின் ஆட்சிக்காலம் தமிழகத்தின் பொற்காலம். தற்போது அவர்களின் வழியில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நல்லாட்சி நடந்து வருகிறது.

கடந்த 4½ ஆண்டுகளில் எம்.பி.யாக நான் இருந்து வருகிறேன். இந்த கால கட்டத்தில் மத்திய அரசு நிதி மூலம் ஏறத்தாழ 70-க்கும் மேற்பட்ட சாலைகள் ரூ.100 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நாடாளுமன்ற தொகுதிக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். ஆனேக்கல் முதல் ஓமலூர் வரையிலான ஒரு வழி ரெயில் பாதையை இருவழி பாதையாக மாற்றுவதற்கு ரூ.324 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அதிகம் நடைபெறும் விபத்துக்களை தடுக்கும் பொருட்டு 5 வெவ்வேறு இடங்களில் நடை மேம்பாலம், பிரிவு சாலைகள் மற்றும் தென்னையம் பட்டி சந்திப்பு மேம்பாலம் ஆகியவை அமைப்பதற்கு ரூபாய் 24 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி - திண்டிவனம் வரையிலான நெடுஞ்சாலை ரூ. 512 கோடி மதிப்பில் ஒரு சில நாட்களில் டெண்டர் விடப்பட்டு அங்கே அந்த பணிகள் தொடங்க உள்ளது. தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மலர்கள் ஏற்றுமதி நிலையம், தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதி அலுவலகம், பாஸ்போர்ட் அலுவலகம் உள்ளிட்டவை விரைவில் அமைக்கப்பட உள்ளது. கடந்த 5 ஆண்டுகாலம் ஆட்சி புரிந்த தி.மு.க.வினரால் இங்கே கொண்டுவரப்பட்ட திட்டங்களை பட்டியலிட முடியுமா?. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் ஊத்தங்கரை மனோரஞ்சிதம் நாகராஜ், பர்கூர் சி.வி.ராஜேந்திரன், மாவட்ட மாணவர் அணி செயலாளரும், முன்னாள் நகராட்சி தலைவருமான் கே.ஆர்.சி.தங்கமுத்து, காவேரிப்பட்டணம் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் முனிவெங்கட்டப்பன், முன்னாள் நகராட்சி துணைத் தலைவர் வெங்கடாசலம், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் பால்ராஜ், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேரூராட்சி செயலாளர் வாசுதேவன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்